தமிழகத்தில் ஆண்டுதோறும் வங்க கடலில் மீன்களின் இனப்பெருக்கத்துக்காக ஏப்ரல் மாதம் தொடங்கி 60 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்படுகிறது. இந்த தடைக்காலத்தில் தமிழக அரசு சார்பில் மீனவர்களுக்கு ரூ.5 ஆயிரம் நிவாரணமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிவாரணத்தொகை மீனவர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். அதேபோல் இந்த ஆண்டு மீன்பிடி தடைக்காலம் கடந்த ஏப்ரல் 14-ந்தேதி தொடங்கி 60 நாட்கள் அமலில் இருந்தது.
இதற்கான நிவாரணத்தொகை நாகை பகுதியை சேர்ந்த சில மீனவர்களுக்கு கிடைக்கவில்லை. இதனால் நேற்று நாகை அக்கரைப்பேட்டை, கல்லார், கீச்சாங்குப்பம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் மீன்வளத்துறை இணை இயக்குனரை சந்தித்து முறையிட்டனர். இதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து மீனவர்கள்-பெண்கள் மீன்வளத்துறை அலுவலகம் முன்பு வங்கி கணக்கு புத்தகங்களை கையில் வைத்துக்கொண்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.