குமரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பலத்த மழை பெய்து வருகிறது. கடல் சீற்றத்தால் தூத்தூர், பூத்துறை பகுதியில் அலை தடுப்பு சுவரையும் தாண்டி தண்ணீர் ஊருக்குள் புகுந்தது. பூத்துறை காருண்யாபுரம் பகுதியில் கடல் அலை தடுப்பு சுவர் பெயர்ந்து காணப்பட்டதால், அந்த வழியாக கடல் தண்ணீர் ஊருக்குள் புகுந்து விடுவதாக தெரிகிறது. ஊருக்குள் புகுந்ததால் பாதிக்கப்பட்ட மீனவர்களை பூத்துறை பங்குதந்தை ஆன்றோ ஜோரிஸ், இணை பங்கு தந்தை ரதீஷ், முன்னாள் கவுன்சிலர் ராஜன் ஆகியோர் சந்தித்து குறைகளை கேட்டனர்.
இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த அந்தோணி கூறுகையில், கடல் அலை தடுப்பு சுவரை சீரமைக்க தமிழக அரசு நிதி ஒதுக்கியுள்ளது. இருப்பினும், பல நாட்களாகியும் அலை தடுப்பு சுவரை சீரமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறினார்.