உள்ளாட்சி தேர்தலுக்கு முன் மீனவ கிராமங்களைத் தனிக் கிராம பஞ்சாயத்தாக அறிவிக்கக்கோரி வழக்குத் தொடரப்பட்டது. இது குறித்து ஆகஸ்ட் 17ம் தேதிக்குள் பதிலளிக்கத் தமிழக அரசு மற்றும் மாநில தேர்தல் ஆணைய வார்டு மறுவரையறை குழுவுக்குச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மீனவர்களைத் தாழ்த்தப்பட்ட அல்லது பழங்குடியினர் வகுப்பில் சேர்த்து அவர்கள் அதிகம் வசிக்கும் பகுதியை தனித் தொகுதியாக வரையறை செய்ய வேண்டும். மேலும் மீனவ கிராமங்களைத் தனிக் கிராம பஞ்சாயத்தாக அறிவிக்க வேண்டும் என்றும் மண்டல ஆணையம் கடந்த 1980 ஆம் ஆண்டு பரிந்துரைத்துள்ளது.
மண்டல ஆணையம் பரிந்துரையின் படி, மீனவ கிராமங்களைக் கிராம பஞ்சாயத்தாக அறிவிக்க வேண்டும் என மீனவர் பாதுகாப்பு சங்கம் கொடுத்த மனு மீது எந்தவித நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. மொத்தம் தமிழகத்தில் உள்ள 13 கடலோர மாவட்டங்களில் 608 மீனவ கிராமங்கள் உள்ளன. இதில் 9.24 லட்சம் மக்கள் தொகை கணக்கிடப்பட்டுள்ளது. மேலும் கிராம பஞ்சாயத்துகளுக்கு ஒதுக்கும் நிதி மீனவ கிராமங்களுக்குச் சென்றடையவில்லை எனப் பலவிதமான குற்றச்சாட்டுகள் மனுதாரர் தரப்பில் வைக்கப்பட்டது.
அதன்பின் இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள், இது தொடர்பாக வருகிற ஆகஸ்ட் 17ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறு தமிழக அரசு மற்றும் மாநில தேர்தல் ஆணைய வார்டு மறுவரையறை குழுவுக்கு உத்தரவு விட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.