தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் கடந்த மாதம் 14-ந் தேதியுடன் முடிவடைந்ததை தொடர்ந்து நாகை மீனவர்கள் ஆயிரக்கணக்கானோர் மீன்பிடிக்க கடலுக்கு சென்று வருகின்றனர். இதில் நாகை, அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், கல்லார், நாகூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த 340 விசைப்படகுகள் தடைக்காலம் முடிவதற்கு முன்பாகவே மீன்பிடிக்க சென்றதாக கூறி விசைப்படகு உரிமையாளர்களுக்கு மீன்வளத்துறை அபராதம் விதித்து திடீரென நோட்டீஸ் அனுப்பியதாக கூறப்படுகிறது.
இந்த 340 விசைப் படகுகளுக்கும் அரசால் வழங்கப்படும் மானிய டீசலையும் வழங்காமல் நாகை மீன்வளத்துறை அதிகாரிகள் சில நாட்களுக்கு முன்பு நிறுத்தி வைத்து நடவடிக்கை எடுத்துள்ளனர். மானிய விலை டீசல் கிடைக்காததால் நாகையில் 340 விசைப்படகுகளும் மீன்பிடிக்க செல்ல முடியாமல் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இதனால் ஆத்திரமடைந்த நாகை மீனவர்கள், கீச்சாங்குப்பம் துறை முகத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு மீன் வளர்ச்சிக்கழக டீசல் விற்பனை நிலையத்தை இழுத்து பூட்டினர். இதனால் அங்கு வழக்கம்போல் டீசல் இறக்க வந்த டேங்கர் லாரிகள் டீசல் இறக்க முடியாமல் திரும்பி சென்றன.
டீசல் விற்பனை நிலையத்துக்கு மீனவர்கள் பூட்டுப்போட்டதால் மற்ற படகுகளுக்கும் டீசல் நிரப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து படகு உரிமையாளர் கனகமணி கூறுகையில் “ 340 விசைப்படகுகளுக்கு மானிய விலை டீசல் வழங்காததால் எங்களுக்கு 40 லட்சம் ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. ஆகவே, மானிய டீசல் விவகாரத்தில் மீனவர்களுக்கு வழங்க வேண்டிய மானிய தொகையை வழங்குவதுடன், இந்த பிரச்சினைக்கு அரசு சுமூக தீர்வு காண வேண்டும் எனக் கூறினார்.