நாகப்பட்டினம் மாவட்டம் பழையாறு மீன்பிடி துறைமுகத்தில் சென்னை மீன்தர மேலாண்மை மற்றும் வளங்குன்றா மீன்பிடிப்புக்கான வலையமைப்பு கடல் பொருட்கள் ஏற்றுமதி வளர்ச்சி ஆணையகம் சார்பில் மீனவர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. மீன் வளத்துறை இணை இயக்குநர் ரினாசெல்வி தலைமை வகித்தார். உதவி இயக்குநர் மோகன்ராஜ் வரவேற்றார். மீன்வள இன்ஸ்பெக்டர் பாலு முன்னிலை வகித்தார்.
ஒரு மீனவருக்கு ரூ.20 ஆயிரம் மதிப்பில் இலவச மீன்பிடி வலை மற்றும் 250 பேருக்கு இறால் அள்ளும் சவுல் கருவி வழங்கி கடலோர காவல்படை கமாண்டோ செல்வநாதன் பேசுகையில், மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லும்போது கவனமாகவும், பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும். மீன்பிடி படகுகள் 24 மீட்டர் நீளமுள்ளதாக பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். பதிவு செய்யாத படகுகளை உடனடியாக பதிவு செய்ய வேண்டும். மீன் பிடிக்க செல்வோருக்கு விரைவில் வாக்கி டாக்கி வழங்கப்படும். கடலில் மர்மபொருள் தென்பட்டால் உடனடியாக கடலோர காவல்படைக்கு தெரியப்படுத்த வேண்டும் எனப் பேசினார். இக்கூட்டத்தில் நூற்றுக்கணக்கான மீனவர்கள் கலந்து கொண்டனர்.