கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை ஏற்பட்டுள்ளதால் கர்நாடகாவின் கடலோர மாவட்டங்களான கார்வார், உடுப்பி மற்றும் தென்கனராவை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று வானிலை இலாகா அறிவித்து இருந்தது. இதனால் கடலோர மாவட்ட மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
ஆனால் இந்த தகவலை அறியாத கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் கேரள மாநிலம் கொச்சி வழியாக மங்களூருவில் இருந்து 15 மைல் தொலைவில் நங்கூரம் இட்டு மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது ஏற்பட்ட கடல் சீற்றத்தில் சிக்கிய படகு சேதம் ஏற்பட்டு நீரில் மூழ்கியது. இதில் படகில் இருந்த 10 பேரும் தண்ணீரில் தத்தளித்தனர்.
இதுகுறித்து அறிந்த மங்களூரு கடற்கரை பாதுகாப்பு படையினர் கடலில் தத்தளித்த 10 மீனவர்களையும் பத்திரமாக மீட்டனர். பின்னர் அவர்களை கன்னியாகுமரிக்கு அனுப்பி வைக்கும் பணியில் கர்நாடக மீன்வளத்துறை மற்றும் கடலோர காவல் படை அதிகாரிகள் ஈடுபட்டு உள்ளனர்.