அதிமுகவின் திருத்தப்பட்ட கட்சி விதிகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளதால் ஜெயலலிதாவிற்கு பிறகு கட்சி ஒபிஎஸ்-இபிஎஸ் கட்டுபாட்டிற்கு அதிகாரபூர்வமாக வந்துள்ளது.
அ.தி.மு.க. பொதுக்குழுக் கூட்டம் கடந்த ஆண்டு செப்டம்பர் 12ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது இக்கூட்டத்தில், சசிகலாவின் பொதுச்செயலாளர் நியமனத்தை ரத்து செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கட்சியின் பொதுச் செயலாளருக்கான அதிகாரங்கள் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்துக்கும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் உள்ளது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கட்சி விதிமுறைகளில் செய்யப்பட்ட திருத்தங்கள் கடந்த ஏப்ரல் மாதம் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. சட்ட விதிகளில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களை ஏற்றுக் கொண்டுள்ள தேர்தல் ஆணையம், அதனை இணையதளத்திலும் வெளியிட்டுள்ளது. இதன் மூலம் தினகரன் தரப்பில் வைக்கப்பட்ட கோரிக்கைகளை தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.