துத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்து தமிழக முழுவதும் இன்று கடையடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது. சென்னையில் மாநகர் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டு இருக்கின்றன.
துப்பாக்கி சூட்டை கண்டித்து தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. அந்த பகுதியில் பஸ் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. வணிகர் சங்கத்தினர் நேற்று கடை அடைப்புப் போராட்டம் நடத்தினார்கள். தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், அனைத்து மாவட்டங்களிலும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து தி.மு.க. மற்றும் தோழமை கட்சிகள் சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என்று தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
தி.மு.க, காங்கிரஸ், ம.தி.மு.க, இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனித நேய மக்கள் கட்சி, திராவிட கழகம் உள்ளிட்ட கட்சிகள் போராட்டத்தில் பங்கேற்றுள்ளன.
இப்போராட்டம் காரணமாக, தமிழகம் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான பேருந்துகள் இயங்கவில்லை. தனியார் பேருந்துகள், ஆட்டோக்கள் இயங்கவில்லை.
சென்னை மாநகர் முழுவதும் அனைத்து பகுதிகளிலும் கடைகள் முழுமையாக கடைகள் அடைக்கப்ப்டுள்ளன. இந்த கடையடைப்புக்கு பொதுமக்களும் ஆதரவு தெரிவித்த வருகின்றனர். கடைகள் மட்டுமல்லாது. பல தனியார் நிறுவனங்களும் தங்களது ஆதரவை வெளிபடுத்தும் விதமாக தங்களது நிறுவங்களுக்கு விடுமுறை விட்டுள்ளன.
ஆனால் எதிர்கட்சிகள் போராட்டம் அறிவித்துள்ள நிலையில், பேருந்துகள், ரெயில்கள் வழக்கம்போல் ஓடும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. முழு அடைப்பு போராட்டத்தையொட்டி பேருந்து நிலையம் மற்றும் ரெயில் நிலையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.