தமிழக மீனவர்கள் 8 பேர்களுக்கு இலங்கை நீதி மன்றத்தில் சிறை தண்டனையும், ரூ 60 லட்சம் அபராதமும் விதிக்க பட்ட பிரச்சினையில் உரிய நடவடிக்கை எடுப்பதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி உறுதி அளித்துள்ளதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 8 மீனவர்கள் ஒரு படகில் கடலில் மீன் பிடித்து கொண்டிருந்தபோது இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாக கூறி இலங்கை கடல் படையினர் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். படகும் பறிமுதல் செய்யப்பட்டது.
பின்னர் மீனவர்கள் 8 பேருக்கும் தொடர்ச்சியாக நீதிமன்ற காவல் நீடிக்கப்பட்டு வந்தது.
கடந்த திங்கள் கிழமையன்று இலங்கையில் கல்பிட்டி நீதிமன்றத்தில் 8 மீனவர்களுக்கும் தலா 3 மாதம் சிறை தண்டனையும், ரூ 60 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது,.
இலங்கை அரசின் தண்டனை வழங்கும் நடவடிக்கைக்கு தமிழகத்தின் பல்வேறு கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தமிழக மீனவர்களுக்கு இலங்கையில் புதிய சட்டத்தின் மூலம் தண்டனை வழங்கும் நடவடிக்கையை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் இலங்கை சிறையில் உள்ள 24 மீனவர்களை மீட்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு கோரிக்கை விடுத்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தார்.
இந்த கடிதத்திற்கு பதிலளித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி இலங்கை அரசோடு பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசிடம் தெரிவித்துள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது கூறியுள்ளார்.