எல்லை தாண்டி இலங்கை கடல் பகுதியில் மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 8 பேருக்கு 3 மாத சிறை தண்டனையும், ரூ 60 லட்சம் அபராதமும் விதித்து இலங்கை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் 8 பேர் கடந்த ஆகஸ்ட் மாதம் கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த போது எல்லை தாண்டி இலங்கை கடல் பகுதியில் மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர். படகும் பறிமுதல் செய்யப்பட்டது.
பின்னர் இலங்கை சிறையில் அடைக்கப்பட்ட அவர்களுக்கு தொடர்ந்து ரிமாண்ட் நீடிக்கப்பட்டு சிறையில் இருந்து வந்தனர்.
இது குறித்து வழக்கு இலங்கையில் உள்ள கல்பிட்டி நீதி மன்றத்தில் நேற்று விசாரிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டது.
இந்திய மீனவர்கள் 8 பேர் களுக்கும் 3 மாத சிறை தண்டனையும் இலங்கை ரூபாயில் ரூ. 60 லட்சம் அபராதம் விதித்து கல்பிட்டி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இது இந்திய மதிப்பில் சுமார் ரூ. 30 லட்சமாகும்
தீர்ப்பையொட்டி மீனவர்கள் 8 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர். இத்தீர்ப்பு தமிழக மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையில் சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்ட 8 இந்திய மீனவர்களை தண்டனையிலிருந்து விடுவிக்கவும் தற்போது இலங்கையில் சிறையில் உள்ள 16 மீனவர்களை இது போன்ற சிறை தண்டனை மற்றும் பெரும் அபராத தண்டனை பெறாமல் மீட்கவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு கோரிக்கை விடுத்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் ஒன்றை பிரதமருக்கு இன்று அனுப்பி உள்ளார்.