மீனவ சமுதாய மூத்த தலைவரும், காரைக்கால் மாவட்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ஜி. பஞ்சவர்ணம் (68) இன்று காலை சென்னையில் மருத்துவமனையில் காலமானார்.
உடல் நல குறைவு காரணமாக சென்னை கே.கே. நகரில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று காலை 6.10 மணிக்கு இயற்கை எய்தினார்.
அவருடைய உடல் தற்பொழுது சென்னையில் இருந்து காரைக்கால் கொண்டு செல்லப்படுகிறது 1980 – 1983 ஆண்டுகளில் காரைக்கால் கோட்டுச்சேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். தி. மு. கவில் சட்டமன்ற உறுப்பினராக இருந்த அவர் மீனவ சமுதாய மூத்த தலைவர்களுள் ஒருவர்.
மீனவ சமுதாயத்தை பழங்குடியினராக அங்கீகரிக்க கோரி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மா. இளங்கோ தலைமையில் 1996 ஆம் ஆண்டில் டெல்லியில் அப்போதைய பிரதமர் தேவகவுடா அவர்களை சந்தித்து வலியுறுத்திய 40 பேர் கொண்ட மீனவ சமுதாய பிரதிநிதிகள் குழுவில் இடம் பெற்று இருந்தார்.
அவருக்கு சரோஜா என்ற மனைவியும் பார்த்திபன், வெற்றிச்செல்வன், திருக்குமரன். என்று 3 மகன்களும், கனிமொழி, தேன்மொழி என்று இரண்டு மகள்களும் உள்ளனர்.
காரைக்கால் அக்கம்பேட்டை கடற்கரை கிராமத்தைச் சேர்ந்த அவர் தற்பொழுது கோட்டுச்சேரியில் வசித்து வந்தார் .
கோட்டுச்சேரியில் நாளை (16-10-2018) செவ்வாய்க்கிழமை மாலை 3.00 மணிக்கு இறுதிச்சடங்குகள் நடைபெற்று தகனம் செய்யப்படவுள்ளது.
மூத்த அரசியல் தலைவரும், மீனவ சமுதாய முன்னோடி தலைவருமான ஜி. பஞ்சவர்ணம் மறைவுக்கு தேசிய மீனவர் பேரவை தலைவர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான மா. இளங்கோ இரங்கல் தெரிவித்துள்ளார்.