புதிய தலைமைச் செயலக கட்டிட முறைகேட்டுப் புகார் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை இனி விசாரணை நடத்தும் என்று உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு கூறியுள்ளது.
புதிய தலைமை செயலகம் கட்டியதில் முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக எழுந்த புகார் குறித்து விசாரிக்க கடந்த 2011 ஆம் ஆண்டு நீதிபதி ரகுபதி தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது. இதற்கு எதிராக மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, ஸ்டாலின், துரைமுருகன் ஆகிய மூவரும் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் ரகுபதி ஆணையத்தின் செயல்பாடுகளை நிறுத்தி வைக்க உத்தரவிட்டது.
இதனயடுத்து நீதிபதி ரகுபதி ஆணையத்தின் தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். இதன் பின்னர் புதிய நீதிபதியை நியமிக்க தமிழக அரசு முடிவு செய்து உள்ளதா என்பது குறித்து பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் இந்த புகார்கள் தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், புதிய நீதிபதியை நியமித்து விசாரணை ஆணையத்தைப் புதுப்பிக்கும் திட்டமில்லை என்றும் தெரிவித்தார். இதில் அடுத்த கட்ட விசாரணையை மேற்கொண்டு லஞ்ச ஒழிப்பு துறை மேற்கொள்ளும் என்றும் அவர் கூறினார்.
இதையடுத்து இந்த வழக்கு தொடர்பான உத்தரவை நாளை பிறப்பிப்பதாக தெரிவித்த நீதிபதி, உயர் நீதிமன்றம் ஆணையத்திற்கு எதிரானது அல்ல என்றும், நியாயமான பிரச்னைகளுக்கு ஆணையம் அமைக்கலாம் என்றும் விளக்கம் அளித்தார்.