மானாவாரி நிலங்களில் விதை நேர்த்தி செய்தால் கூடுதல் மகசூல் கிடைக்கும்
தற்போது மானாவாரி நிலங்களில் விதைப்பு துவங்கியுள்ளது.
இவற்றில் நிலக்கடலை மற்றும் துவரை பயிர் சாகுபடியில் பூஞ்சாண விதை நேர்த்தி மற்றும் நுண்ணுயிர் உரவிதை நேர்த்தி செய்ய வேண்டும்.
பூஞ்சாண விதை நேர்த்தி செய்வதின் மூலம் விதைகள் மூலம் பரவும் நோய்களை கட்டுப்படுத்தி பயிர் எண்ணிக்கையை பராமரிக்க ஏதுவாகிறது.
நுண்ணுயிர் உரவிதை நேர்த்தி செய்வதின் மூலம் விதைகள் நன்கு முளைத்து நல்ல வேர் வளர்ச்சி மற்றும் தண்டு வளர்ச்சியுடன் காணப்படும்.
பயிர்கள் ஒரளவிற்கு வறட்சியை தாங்கி வளரும்.
இந்த நுண்ணுயிர்கள் வேர் முடிச்சுகளில் தங்கி வாயு மண்டலத்தில் உள்ள தழைசத்தை செடிகளுக்கு வழங்கும்.இதன் மூலம் உரசெவிற்கான செலவினம் குறைந்து வருமானம் அதிகரிக்கும்.
பூஞ்சாண விதை நேர்த்தி செய்யும் போது ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் கார்பண்டாசியம் அல்லது 4 கிராம் மேங்கோசெப் அல்லது 4 கிராம் டிரைக்கோடெர்மாவிரிடி ஆகியவற்றை கலந்து 24 மணி நேரம் கழித்து விதைக்க வேண்டும்.
அதேபோல் நுண்ணுயிர் உரங்களான பாஸ்போ பாக்டீரியா மற்றும் ரைசோபியம் நுண்ணுயிர் கலவையினை விதைப்பதற்கு முன் கலந்து விதைக்க வேண்டும்.
நிலக்கடலை பயிருக்கு ஒரு ஏக்கருக்கு உண்டான 55 கிலோ பருப்புக்கு 2 பாக்கெட் ரைசோபியம் 2 பாக்கெட் பாஸ்போ பாக்டீரியா ஆகியவற்றை 500 மில்லி அரிசி கஞ்சியில் கலந்து அதனை விதைகளுடன் கலக்க வேண்டும்.
அதன்பின் அவ்விதைகளை நிழலில் உலர வைத்து விதைக்க வேண்டும்.
பயிறு வகை விதைகளுக்கு 1 கிலோ விதைகளுக்கு 1 பாக்கெட் பாஸ்போ பாக்டீரியா மற்றும் 1 பாக்கெட் ரைசோபியம் பயன்படுத்த வேண்டும்.
தேவையான அளவு உயிர் உரங்கள் வேளாண்மை விரிவாக்க மையத்தில் இருப்பில் உள்ளது. அதை விவசாயிகள் 50 சதவீதம் மானிய விலையில் பெற்று பயன்படுத்தி பயனடையுமாறு கேட்டு கொள்கிறோம்.