இலங்கையில் சிறைபிடிக்கப்பட்டுள்ள தமிழக படகுகளை மீட்க மத்திய–மாநில அரசுகளை வலியுறுத்தி கடந்த 3–ந்தேதி முதல் ராமேசுவரம் பகுதி மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர். நேற்று பஸ் நிலையம் அருகே இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என அறிவித்திருந்தனர்.
இதுபற்றி அறிந்த கலெக்டர் வீரராகவராவ் மீனவர் சங்க தலைவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் என்.ஜே.போஸ், சேசு, எமரிட், சகாயம், அல்போன்ஸ் உள்பட மீனவர் சங்க தலைவர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது மீனவர்களின் பிரச்சினையை அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக கலெக்டர் உறுதி அளித்தார். அதை தொடர்ந்து நேற்று நடைபெற இருந்த ஆர்ப்பாட்டத்தை கைவிடுவதாக மீனவர் சங்க தலைவர்கள் தெரிவித்தனர்.