மேட்டூர் அணை, இந்த ஆண்டில் மூன்றாவது முறையாக முழுக் கொள்ளளவை எட்டியுள்ளது. அணையிலிருந்து 60 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடரும் மழை காரணமாக, கர்நாடக அணைகள் நிரம்பி, அதில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன் காரணமாக, 5 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த மாதம், மேட்டூர் அணை அதன் முழுக் கொள்ளளவை எட்டியது.
பின்னர் அதனை தொடர்ந்து இரண்டாவது முறையாக கடந்த 11-ம் தேதி மீண்டும் கொள்ளளவை எட்டியது. இந்த நிலையில், ஒரே ஆண்டில் மூன்றாவது முறையாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் அதன் முழு கொள்ளளவான 120 அடியை நேற்று எட்டியது. அணையின் நீர்மட்டம் தற்போது 120.21 அடியாக உள்ளது.
இதையடுத்து, அணைக்கு நொடிக்கு 75,000 கன அடி நீர் வரும் நிலையில் 60,000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 92.8 டிஎம்சி-யாக உள்ளது.