குளச்சல் மீன்பிடி துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு 300 –க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், ஆயிரத்துக்கு மேற்பட்ட கட்டுமரங்களும் மீன்பிடித்து வருகின்றன. கட்டுமர மீனவர்கள் தினமும் அதிகாலையில் கடலுக்கு சென்று மதியம் கரை திரும்புவார்கள். ஆனால், விசைப்படகு மீனவர்கள் ஆழ்கடலுக்கு சென்று பல நாட்கள் வரை தங்கியிருந்து மீன்பிடிப்பார்கள். இவர்களது வலையில் பலவகைப்பட்ட உயர் ரக மீன்கள் சிக்கும்.
கடந்த ஜூன், ஜூலை மாதங்கள் மேற்கு கடற்கரை பகுதியில் மீன்பிடி தடைகாலம் அமலில் இருந்தது. இதனால், குளச்சலில் உள்ள விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. அவர்கள் தங்களது படகுகளை கரையோரம் நிறுத்தி வைத்து பராமரிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
தடைகாலம் முடிந்து கடந்த 1–ந் தேதி ஏராளமான விசைப்படகு மீனவர்கள் ஆழ்கடலுக்கு புறப்பட்டனர்.
அவர்கள் தற்போது கரை திரும்ப தொடங்கியுள்ளனர். குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் நேற்று அதிகாலையில் 3 விசைப்படகுகள் கரை சேர்ந்தன. அந்த விசைப்படகுகளில் நவரை என்கிற கிளிமீன் இருந்தது. அந்த மீன்களை துறைமுகத்தில் உள்ள ஏலக்கூடத்துக்கு எடுத்து வந்து ஏலம் விட்டனர். அவற்றை உள்ளூர் ஏலக்காரர்கள் ஏலம் எடுத்தனர். கரை திரும்பிய மீனவர்களுக்கு குறைவான அளவு மீன்களே கிடைத்தன.